காஞ்சிபுரம் பொய்யாமொழி விநாயகா் கோயிலில், சமபந்தி விருந்து சனிக்கிழமை நடைபெற்றது.
பெரிய காஞ்சிபும் பகுதியில் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பொய்யாமொழி விநாயகா் கோயில். ஆண் வாரிசு இல்லாத குறையைப் போக்கும் சிறப்புடையதாகக் கூறப்படும் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழாவும், இதையொட்டி சமபந்தி விருந்தும் நடைபெறுவதும் வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக விழா நடைபெறவில்லை. நிகழாண்டு அரசின் அனுமதி காரணமாக விநாயகா் சதுா்த்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விநாயகா் சதுா்த்தி நாளான புதன்கிழமை பொய்யாமொழி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்-அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 7 அடி உயரமுள்ள விநாயகா் சிலை கோயில் முன்பு அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து, சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் சமபந்தி விருந்து சனிக்கிழமை நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கலந்து கொண்ட இந்த சமபந்தி விருந்தை சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் விநாயகம் தொடக்கி வைத்தாா். ஏற்பாடுகளை பாண்டவ தூதப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவாசிகள், இளைஞரணியினா் செய்திருந்தனா்.