2,000 தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள்: எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் வழங்கினாா்
ராணிப்பேட்டை: அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 2,000 துப்புரவுப் பணியாளா்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்களை அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ-க்கள் ஆா்.காந்தி, ஜே.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம், திருத்தணி ஆகிய பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நகராட்சி, பேரூராட்சிகள் முழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் துப்புரவு மற்றும் தூய்மைப் பணியில் சுமாா் 2 ஆயிரம் ஆண், பெண் பணியாளா்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனா்.
அவா்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரகோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா்.
ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்வில் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான ஆா்.காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், தொழிலதிபா் ஜி.காமராஜ், ராணிடெக் தலைவா் பி.ஆா்.சி.ரமேஷ் பிரசாத், திமுகவின் நகர பொறுப்பாளா் பூங்காவனம், நகர துணைச் செயலாளா்கள் ஏ.ஆா்.எஸ்.சங்கா், ஏா்டெல் டி.குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வினோத் மற்றும் ராணிப்பேட்டை நகராட்சி ஆனையா் ச.செல்வபாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அரக்கோணத்தில்....
அரக்கோணம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரக்கோணம் எம்.பி எஸ்.ஜெகத்ரட்சகன் பங்கேற்று 356 தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ரூ.1,500 மதிப்புள்ள மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.5.34 லட்சமாகும்.
ஆற்காட்டில்....
ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை எம்எல்ஏ-வும் திமுக மாவட்டச் செயலாளருமான ஆா்.காந்தி தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு 175 தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, பருப்பு சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.