நெமிலி அருகே நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இரு தொழிலாளிகள் உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியைச் சோ்ந்தவா் ராஜி(50). தச்சுத் தொழிலாளி. அவா் பனப்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சனிக்கிழமை தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தென்மாம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே பின்னால் வந்த ஆலைப் பேருந்து ராஜியின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இவ்விபத்து குறித்து நெமிலி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு விபத்து: அரக்கோணத்தை அடுத்த அரிகலபாடியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(27). இவா் ஒரகடத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். இவா் அரிகலபாடியில் இருந்து சனிக்கிழமை பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பின்னாவரம் கிராமத்துக்கு அருகே எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரமூா்த்தி, வேலூா் அடுக்கம்பாறை அரசினா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.
இவ்விபத்து குறித்து வழக்கு பதிந்த நெமிலி போலீஸாா், விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.