மின் இணைப்பு வழங்காததைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கலைஞர் நகர் பகுதியில் 30கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த15 ஆண்டுகளாக இவர்களுக்கு மின் இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. மின் இணைப்பிற்காக பலமுறை வட்டாட்சியர், மின்வாரியத் துறை, மாவட்ட ஆட்சியர், முதல்வர் அலுவலகம் என 30க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்திருக்கின்றனர்.
எனினும் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மின் இணைப்பு வழங்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சிகள் சார்பில் பொது மக்களை ஒன்று திரட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சம்பவம் அறிந்து ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முற்றுகையில் ஈடுபட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வதாக தெரிவித்து ஆட்சியர் அலுவலக வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், நாம் தமிழர் கட்சியினர் என 50 க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.