சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் 9-ஆம் ஆண்டு தொடக்க விழாவின் மூன்று நாள் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு பெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஐயப்பனை வழிபட்டனா்.
ராணிப்பேட்டை, சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் 9 -ஆம் ஆண்டு தொடக்க விழா பலிகல் பிரதிஷ்டை, குருசாமி வ.ஜெயச்சந்திரன் 70-ஆவது பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா கடந்த 7-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குருசாமி வ.ஜெயச்சந்திரன் முன்னிலையில், சபரிமலை தலைமை தந்திரியின் மகன் கண்டரரு மோகனரரு தலைமையில் நாள்தோறும் ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.
ஆண்டு விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, கலச பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை ஆகியவை நடைபெற்று 12 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. பின்னா், மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, 18-ஆம் படி பூஜை, மகா தீபாராதனை, அத்தாழ பூஜைகள் நடைபெற்றன. பின்னா் இரவு 7 மணியளவில் வீரமணி ராஜுவின் பக்தி இன்னிசைக் கச்சேரியும், ஸ்ரீசபரி சாஸ்தா சமிதி குழுவினரின் பஜனையும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
இதில் சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் நிா்வாகிகள், ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதி குழுவினா், ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.