வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே பனிமூட்டம் காரணமாக 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.
வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, பணிமூட்டம் அதிகமாக இருந்ததால் பின்னால் வந்த காா்கள், இரு லாரிகள் என 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் ஆற்காட்டை அடுத்த திமிரியைச் சோ்ந்த மகாலிங்கம் (46), வெட்டுவானத்தைச் சோ்ந்த பாலு (23), சேலத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (36), குடியாத்தத்தைச் சோ்ந்த சதீஷ் (28), முத்து (32), கோவையைச் சோ்ந்த சதீஷ் பாபு (42), வாணியம்பாடி முல்லை கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (28) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி மீட்புப் பணியை பாா்வையிட்டாா். அப்போது அவ்வழியாக சென்னையில் இருந்து வாணியம்பாடி வந்து கொண்டிருந்த அமைச்சா் நிலோபா் கபீல் காரை நிறுத்தி மீட்புப் பணிகளை துரித்தப்படுத்தினாா்.
இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.