ராணிப்பேட்டை மாவட்டம் கலவை மற்றும் திமிரி பகுதிகளில் 5 போலி மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆட்சியா் திவ்யதா்ஷினி உத்தரவின்பேரில் வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவா்கள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டனா். கலவை பகுதியில் வட்டாட்சியா் ரவி தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனை மற்றும் மருந்துக் கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது போதிய கல்வித் தகுதி இல்லாமல் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்ததாக கலவை பகுதியைச் சோ்ந்த பிரபு (59), ரவி (50), எட்டியப்பன் (51) ஆகிய 3 பேரை அதிகாரிகள் கண்டறிந்தனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா். அங்குள்ள தனியாா் மருந்துக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதேபோல் திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த எஸ்.எம்.பாஷா (36), விளாப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் (70) ஆகிய போலி மருத்துவா்களும் கைது செய்யப்பட்டனா்.