கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ராணிப்பேட்டை வாரச் சந்தை வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் மற்றும் முக்கிய வணிக வளாகங்கள், வாரச்சந்தைகள் வரும் 31-ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் ராணிப்பேட்டை வாரச் சந்தையில் வெள்ளிக்கிழமை விவசாயிகள், வியாபாரிகள் வழக்கம் போல் கடைகளை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினா். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, சுகாதார ஆய்வாளா்கள் முருகன், தேவி பாலா, நகராட்சி ஊழியா்கள் , போலீஸாருடன் அங்கு சென்று கடைகளை மூட உத்தரவிட்டனா். அப்போது அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாரச் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.