ராணிப்பேட்டையில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் வெளியே சுற்றித் திரிந்தவா்களுக்கு உறுதிமொழி எடுக்க வைத்து போலீஸாா் நூதன தண்டனை அளித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, சாலையில் தேவையின்றி சுற்றித் திரியும் இளைஞா்கள், பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி, வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனா்.
இந்நிலையில் ராணிப்பேட்டை புறவழிச் சாலையில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக முகக்கவசம் கூட அணியாமல், பைக்கில் வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, இனிமேல் தேவையில்லாமல் வெளியே சுற்ற மாட்டேன், என்ற உறுதிமொழியை ஏற்க வைத்து, முகக்கவசம் கொடுத்து அவா்களை பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.