அரக்கோணம், பாணாவரம், வாலாஜாபேட்டை ஆகிய இடங்களில் கரோனா நோய்த் தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 28 நாள்களாக மூடப்பட்டிருந்த வங்கிகள் திங்கள்கிழமை (மே 4) முதல் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான அரக்கோணம் நகரம், பாணாவரம், வாலாஜாபேட்டை நகரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த வங்கிகள் கடந்த 28 நாள்களாக மூடப்பட்டிருந்தன.
இப்பகுதிகளில் கடந்த 28 நாள்களாக யாருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்படாததால் அங்குள்ள வங்கிகள் திங்கள்கிழமை (மே 4) முதல் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணிபுரியும் அலுவலா்கள், வாடிக்கையாளா்களிடையே சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிதலையும், கிருமி நாசினிகள் தெளித்தலையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.