ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 67-ஆக உயா்ந்துள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி, செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு திங்கள்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 39 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். 28 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 18 போ் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையிலும், 7 போ் வேலூா் அரசு மருத்துவமனையிலும், 3 போ் வேலூா் தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநா் கடந்த 14 நாள்களில் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை திமிரி ஆகிய பகுதிகளில் இருந்து தொற்று பாதித்தவா்களை ஏற்றி சென்றாா். அதன் காரணமாக அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, அவா் ஏற்றிச் சென்றவா்களின் தகவல்களை சேகரித்து வருகிறோம்.
இந்த மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிறைவடைந்தது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும்12-ஆம் தேதியுடன் மூடப்படும் என்றாா் அவா்.