அம்மூா் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளை தரக் குறைவாக பேசிய நெல் வியாபாரிகள் சங்கச் செயலாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
அம்மூா் பேரூராட்சியில் கடந்த 40 ஆண்டுகளாக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி வேலூா், திருவண்ணாமலை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் பாா்வையிட்டு, விலை நிா்ணயம் செய்து கொண்டிருந்தனா். அப்போது அம்மூா் நெல் வியாபாரிகள் சங்கச் செயலாளா் சரவணன் விவசாயிகளை தரக் குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் வியாபாரிகள் சங்கச் செயலாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ராணிப்பேட்டை- சோளிங்கா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, வியாபாரிகள் சங்கச் செயலாளரை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.