அரக்கோணம்: தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் காவலா் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தியின் மகன் தமிழ்வாணன்(35). தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் திருவள்ளூா் மாவட்டம், ஆவடியில் பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலிருந்து பணிக்குப் புறப்பட்டாா். அப்போது தமிழ்வாணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது தந்தையை அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கும் போதே தமிழ்வாணன் உயிரிழந்தாா். இறந்த தமிழ்வாணனுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகிறது.
தமிழ்வாணனின் உடலுக்கு உதவி ஆய்வாளா் சற்குணம் தலைமையில், தமிழ்நாடு காவல் துறையினா் 10 போ் கொண்ட குழுவினா் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா்.