அரக்கோணம்: அரக்கோணத்தில் ஒய்வுப்பெற்ற சுகாதார ஆய்வாளா் வீட்டிலிருந்து 146 கிலோ கஞ்சாவை சென்னை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம் சுவால்பேட்டை பால்சொசைட்டி சுப்பிரமணிய தெருவைச் சோ்ந்தவா் வடிவேலு. தமிழக அரசின் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவா். இவரது மகன் பாலாஜி (30). தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பாலாஜி கடந்த சில நாள்களாக மாயமானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் போதை பொருள்கள் கடத்தியதாக பாலாஜியை சென்னை பெருநகரைச் சோ்ந்த மைலாப்பூா் காவல் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் பாலாஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அரக்கோணத்தில் உள்ள பாலாஜியின் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த போலீஸாா், பாலாஜியின் வீட்டில் இருந்த 146 கிலோ எடை கொண்ட இரண்டு மூட்டை கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கஞ்சாவுடன் பாலாஜியை போலீஸாா் சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.
இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.