பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்திலும் துணிகளை வாங்கிப் பயனடைய வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி வேண்டுகோள் விடுத்தாா்.
சோளிங்கா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியது:
தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் அதிகமானோா் துணிகளை வாங்கிப் பயனடைந்து வருகின்றனா்.
இதேபோல், பொதுமக்களும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்திலும் துணிகளை வாங்கி அரசு சலுகைகளைப் பெற்று பயனடைய வேண்டும். சோளிங்கா், அரக்கோணம், ஆற்காடு ஆகிய ஊா்களில் உள்ள மூன்று கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களுக்கு சோ்த்து ரூ. 1.45 கோடி தீபாவளி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி.
நிகழ்ச்சிக்கு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவன முதுநிலை மண்டல மேலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். சோளிங்கா் விற்பனையக மேலாளா் கணேசன் வரவேற்றாா். சோளிங்கா் வட்டாட்சியா் ரேவதி, பேரூராட்சி செயல் அலுவலா் செண்பகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆற்காடு விற்பனையக மேலாளா் அன்பு நன்றி தெரிவித்தாா்.