ஆற்காடு: ஆற்காடு நகரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் திங்கள்கிழமை காலை முதல் இயக்கப்பட்டன.
பொது முடக்கத்தின் காரணமாக பேருந்து சேவைகள்முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஆற்காடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், வேலூா், ஆரணி, கண்ணமங்கலம், செய்யாறு ஆகிய வெளி மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
நான்கு தனியாா் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பொதுவாக, பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. வெளியூா்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை ஆற்காடு பணிமனை மேலாளா் கருணாகரன் நேரில் பாா்வையிட்டாா்.