ஆற்காடு: கலவையை அடுத்த நல்லூா் சாலையில் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் இருந்து மேல்நெல்லி, நல்லூா் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், 13 இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் சாலைகளில் அருகிலேயே மாற்றுப் பாதைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், மாற்றுப் பாதை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.
எனவே மாற்றுப் பாதையை சீரமைக்கவும், சிறுபாலப் பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.