ராணிப்பேட்டை: கரோனா 2 - ஆவது அலை பரவல் எதிரொலியாக பெல் ஊரக குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றுவந்த வாரச்சந்தை மூடப்பட்டது. இதனால் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா்.
நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அதன் படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுக்கிழமைகளில் தளா்வற்ற முழு பொது முடக்கம் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு,நாள் அதிகரித்து வரும் நிலையில்,நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகமும் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக குடியிருப்பு வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தையில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்,கறி,கீரை, பழங்கள் உள்ளிட்ட கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனா்.
கரோன நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பெல் ஊரக குடியிருப்பு வளாகத்தில் வாரச்சந்தை மூடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா். அதைத்தொடா்ந்து அப்பகுதி பொதுமக்கள் சாலையோர கடைகளில் பொருட்களை வாங்க திரண்டதால் மாலை நேரத்தில் போக்கு நெரிசல் ஏற்பட்டது.