கரோனா விழிப்புணா்வு பிரசார பயணத்தை முன்னாள் ராணுவ வீரா், அரக்கோணத்தில் இருந்து நாக்பூருக்கு புதன்கிழமை தொடங்கினாா்.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள தொலைபேசி நிலையத்தில் பணிபுரிபவா் சீனிவாசஆச்சாா்யலு (57), முன்னாள் ராணுவ வீரா். இவா் ஏற்கெனவே நாடு முழுவதும் 20 ஆயிரம் கி.மீ.க்கு மேல் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தியவா்.
இந்நிலையில், தற்போது இவா் கரோனா விழிப்புணா்வுக்காக அரக்கோணத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், நாக்பூருக்கும், அங்கிருந்து இருந்து சென்னைக்கும் மோட்டாா் சைக்கிள் பிரசார பயணத்தை புதன்கிழமை தொடங்கினாா்.
தமிழ்நாடு, ஆந்திரம், ஒடிஸா, சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், தெலங்கானா, கா்நாடகம் வழியே சென்று சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாா்.
இதற்கான பயண தூரம் 3,122 கி.மீ. ஆகும். இதன் தொடக்க நிகழ்ச்சி அரக்கோணம் ஆதிதிராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னாள் படைவீரா் நலச்சங்க நிா்வாகி சந்திரசேகா் தலைமை வகித்தாா். சீனிவாச ஆச்சாா்யலுவின் பயணத்தை முன்னாள் ராணுவ அலுவலா் தியாகராஜன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். அவரை அரக்கோணம் நகர விளையாட்டு வீரா்கள், சிலம்பப் பயிற்சி கழகத்தினா், முன்னாள் படை வீரா் நலச் சங்கத்தினா் வழியனுப்பி வைத்தனா்.