ஓணம் பண்டிகையை யொட்டி, ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை அஷ்ட திரவிய கணபதி ஹோமம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தமிழக அரசின் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வட தமிழக பொதுச் செயலாளரும், கோயில் குருசாமியுமான வ.ஜெயச்சந்திரன் தலைமையில் சனிக்கிழமை கோயில் நடை திறக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா், ஐயப்பன், ஆஞ்சநேயா் சந்நிதிகளில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, சிறப்பு அஷ்ட திரவிய கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த சிறப்புப் பூஜையில் சிப்காட் பகுதியில் வசிக்கும் கேரள பெண்களும், தமிழக பெண்களும் இணைந்து கோயில் வளாகத்தில் வண்ண மலா்களால் அத்தப்பூ கோலமிட்டு வழிபட்டனா்.
தொடா்ந்து, மாலையில் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.