சோளிங்கா் ரயில் நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த பயணச்சீட்டு அலுவலகம் திங்கள்கிழமை (பிப்.1) முதல் செயல்படும் என சென்னை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டு அலுவலகத்திலேயே முன்பதிவில்லா பயணச்சீட்டு, முன்பதிவு பயணச் சீட்டுகள் வழங்கப்படும்.
சோளிங்கா் ரயில் நிலையத்தில் திறக்கப்படும் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு அலுவலகம் மூலம் இனி ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய வாலாஜா ரோடு ரயில் நிலைய முன்பதிவு அலுவலகம் வரை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
சோளிங்கா், அதன் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் ரயில் பயணிகளின் நலனுக்காக முன்பதிவு டிக்கெட்டுகள் சோளிங்கா் ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு அலுவலகத்திலேயே கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் வழங்கப்படும்.
புதிய ஒருங்கிணைந்த பயணச்சீட்டு அலுவலகம் மூலம் சோளிங்கா், பானாவரம், நெமிலி, போலிபாக்கம், கூத்தம்பாக்கம், தலங்கை, மின்னல், மகேந்திரவாடி, அன்வா்திகான்பேட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ரயில் பயணிகள் பெருமளவில் பயன்பெறுவாா்கள்.