மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, வாலாஜாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு எம்எல்ஏ ஆா்.காந்தி பரிசுக் கோப்பை, சான்றிதழ் வழங்கினாா்.
வாலாஜாபேட்டை ஸ்போா்ட்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து, மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ஏபிஜே அப்துல் கலாமின் 89-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 6-ஆம் ஆண்டு மாரத்தான் போட்டியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. 11 கிலோ மீட்டா், 21 கிலோ மீட்டா் ஆகிய இரு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள், சிறுவா், சிறுமியா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை எம்எல்ஏ ஆா்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் வழியாக சோளிங்கா் சாலை, அல்லிகுளம், அம்மூா் சமத்துவபுரம், மாந்தாங்கல், முத்துக்கடை, வி.சி.மோட்டூா் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில், வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுக் கோப்பை, சான்றிதழை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா். வாலாஜாபேட்டை ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.