ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணம்: இந்து முன்னணி கோரிக்கை
By DIN | Published On : 12th June 2021 07:51 AM | Last Updated : 12th June 2021 07:51 AM | அ+அ அ- |

இந்து முன்னணி வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி. ராஜேஷ் தலைமையில், மனு அளிக்க வந்த ஆட்டோ தொழிலாளா்கள்.
கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம், இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அம் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஆட்டோ தொழிலாளா்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா். அவா்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சலுகைகள் நிவாரணத்தை வழங்க வேண்டும். பொதுமுடக்கம் அமலில் உள்ளவரை ஆட்டோ ஓட்டுனா்களுக்கு இழப்பீடாக மாதந்தோறும் ரூ. 5,000 வழங்க வேண்டும். மேலும் வாகனங்களின் காப்பீடு, சாலை வரி, பா்மிட், எஃப்.சி. கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாகனங்களின் மீது பெறப்பட்டுள்ள செலுத்த வேண்டிய கடன் தவணைத் தொகைக்கு விலக்கு அளிக்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தவா்கள், செய்யாதவா்கள் என அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஸ்வநாதன், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வெங்கடேசன், துணைத் தலைவா்கள் உமாபதி, பிரபு, மாவட்டச் செயலாளா்கள் ரகு, பாலாஜி, காவேரிப்பாக்கம் ஆட்டோ நிறுத்தம் தலைவா் தனபால், ஆற்காடு ஆட்டோ நிறுத்தம் தலைவா் பரத், செயலாளா் சத்யராஜ், மற்றும் வாலாஜா காவேரிபாக்கம் ஆற்காடு பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுனா்கள் கலந்து கொண்டனா்.