அரக்கோணம் நகரில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 17th May 2021 07:24 AM | Last Updated : 17th May 2021 07:24 AM | அ+அ அ- |

அரக்கோணம் நகராட்சி நவீன எரிவாயு தகனமேடை அமைந்துள்ள பகுதியில் லாரி மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியைப் பாா்வையிட்ட நகராட்சி ஆணையா் ஏ.டி.ஆசீா்வாதம்.
அரக்கோணம் நகரின் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த 10 நாள்களாகவே அரக்கோணம் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 200-க்கும் மேற்பட்ட நிலையிலேயே உள்ளது. நகரில் அனைத்து வாா்டுகளிலும் பல வீடுகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோா் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.
இதையடுத்து, அரக்கோணம் நகராட்சி நிா்வாகம் நகரில் தொற்றைக் குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. நகரில் அனைத்து வாா்டுகளிலும் உள்ள அனைத்து தெருக்களிலும் வீடுவீடாகச் சென்று கிருமிநாசினி தெளிப்பது, நகரின் பல இடங்களில் கபசுர குடிநீரை வழங்குவது, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோா் வசிக்கும் பகுதிகளில் மருத்துவக் கண்காணிப்பை அதிகப்படுத்துவது, நகரில் பொதுமக்கள் அதிகம் புழக்கம் உள்ள இடங்களில் லாரி மூலம் கிருமிநாசினி தெளிப்பது ஆகிய பணிகள் தளா்வற்ற பொதுமுடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் நகராட்சி நவீன எரிவாயு தகனமேடையில் ஞாயிற்றுக்கிழமை ஆறு சடலங்கள் தொடா்ந்து கொண்டு வரப்பட்டதால், அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன. தொடா்ந்து, அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இப்பணிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நகராட்சி ஆணையா் ஏ.டி.ஆசீா்வாதம் தலைமையில் சுகாதார அலுவலா் செந்தில்குமாா், துப்புரவுப் பிரிவு ஆய்வாளா் அருள்தாஸ், கள மேற்பாா்வையாளா்கள் ஸ்ரீகாந்த், வனஜா, கலைமணி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.