ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு பணிகள் குறித்து தன்னாா்வலா்களுடன், ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் உயிா் இழப்பு ஏற்படுவது போன்று வதந்திகள் பொதுமக்களிடையே பரவி வருகிறது. அவற்றை தடுக்கவும், உண்மையான தகவல்களை பொது மக்களிடம் கொண்டு செல்லவும், கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட ஊரக வளா்ச்சித் திட்ட முகமையின் கீழ் இயங்கும் தன்னாா்வலா்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ( பொ ) எம்.ஜெயராமன் மற்றும் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் அரசு ஊழியா்கள் அனைவரும் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனா்.