ராணிப்பேட்டை: ஆற்காட்டில் இருந்து பாணாவரம் வரை சென்றுவந்த தடம் எண் 19 என்ற அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.
மனுவில் தெரிவித்திருப்பதாவது:
ஆற்காடு முதல் பாணாவரம் வரை தடம் எண் 19 அரசுப் பேருந்து பல ஆண்டுகளாக இயங்கப்பட்டுவந்தது.
ஆற்காடு, ராணிப்பேட்டை, முத்துகடை, வாலாஜாபேட்டை, அரசு கலைக் கல்லூரி, வாலாஜா சுங்கச் சாவடி, காவேரிப்பாக்கம், பொன்னப்பன்தாங்கல் வழியாக பாணாவரம் வரை ஒரு நாளைக்கு நான்கு நடைகள் சென்று வந்தது.
இந்த நிலையில் கரோனா பொது முடக்கத்தின்போது, நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்து மீண்டும் துவக்கப்படாமல் உள்ளது.
இந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம். முனிரத்தினத்துக்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்களுக்கும் முன்பே மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவிகள் மனுவில் மேலும் தெரிவித்திருந்தனா்.