அரக்கோணம்: அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட தலித் அமைப்புகள் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேடல் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தாக்கப்பட்டு 3 நாள்களாகியும் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமலும், அடித்த குற்றவாளிகளை கைது செய்யாமல் அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளர் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை கோரி அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன் திருத்தணி நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட தலித் அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் அச்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் பழனி ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் திரும்ப பெறப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
தொடர்ந்து அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் இருதரப்பிற்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.