காங்கிரஸ் கட்சி சாா்பில், சுதந்திர தின விழா 75- ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 75 தொண்டா்களுடன் 75 கி.மீ. தூரம், சுதந்திர தின விழிப்புணா்வு மற்றும் மத்திய அரசின் விலைவாசி உயா்வைக் கண்டித்து பிரசார நடைப்பயணம் ஆற்காட்டை அடுத்த திமிரியில் வியாழக்கிழமை தொடங்கினா்.
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவா் சி.பஞ்சாட்சரம் தலைமையில் தொடங்கிய பயணத்தை சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் தொடக்கி வைத்தாா். இதில் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் கே.ஓ.நிஷாத் அஹமது உட்பட மாநில மாவட்ட மற்றும் இளைஞா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
திமிரியில் தொடங்கி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சோளிங்கா், வழியாகச் சென்று, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 14) அரக்கோணம் நகரில் நடைப்பயணத்தை நிறைவு செய்கின்றனா்.