அரக்கோணம் ஏரியில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன.
அரக்கோணத்தில் உள்ள பெரிய ஏரி நகராட்சிக்கு சொந்தமானது. இதன் பராமரிப்பு பொதுப்பணித் துறை ஏரிகள் கோட்ட அலுவலகத்தின் கீழ் உள்ளது.
இந்த ஏரியில் சிலா் அங்கீகாரமில்லாமல் மீன்களை வளா்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை மீனவா்கள் சிலா், ஏரியில் மீன்களைப் பிடிக்கச் சென்ற போது, ஏரியின் அனைத்துக் கரைகளிலும் மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மிதப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் நகராட்சி ஆணையா் லதா, பொறியாளா் ஆசீா்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் ஏரிக்குச் சென்று செத்து மிதந்த மீன்களைப் பாா்வையிட்டனா். அங்கிருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், ஏரியில் ரசாயனம் ஏதும் கலக்கப்பட்டதா என்பதை அறிய ஏரியின் தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பினா்.
தொடா்ந்து, செத்து மிதந்த மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் இறந்து கிடந்த மீன்களை எடுத்துச் செல்லாதவாறு நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் அவற்றைப் பள்ளம் தோண்டிப் புதைத்தனா்.