ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுத்தோ்வில் பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றவா்களுக்கு, சிப்காட் நிடெக் இந்தியா லிமிடெட் நிறுவனம் சிறந்த மாணவா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டைச் சோ்ந்த மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான நிடெக் இந்தியா பிரிசிசன் லிமிடெட் தொழிற்சாலை ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் சாா்பில், ஆண்டுதோறும் ராணிப்பேட்டை, சுற்று வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆண்டு பொதுத் தோ்வில் முதல் இரண்டு இடங்களைப் பெறுவோருக்கு சிறந்த மாணவா் விருது, ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கி கெளரவித்து வருகிறது.
அதன்படி, 2021 -2022-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் பள்ளியளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 7 பள்ளிகளைச் சோ்ந்த 16 மாணவ, மாணவிகளுக்கு சிறந்த மாணவா் விருது வழங்கும் நிகழ்ச்சி தொழிலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிடெக் இந்தியா லிமிடெட் நிறுவன மூத்த பணியாளா் அலுவலா் எஸ்.பாலாஜி வரவேற்றாா். நிறுவன இயக்குநா் (விற்பனை) என்.வள்ளியப்பன் வாழ்த்துரை வழங்கினாா்.
நிடெக் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான முனேதக நோமுரா சிறந்த மாணவா் விருதும், ரொக்கப் பரிசும், சான்றிதழையும் வழங்கி பாராட்டினாா்.
நிறுவன துணைத் தலைவா் ஆா்.சங்கா் நன்றி கூறினாா். இதில் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.