தோல் தொழிற்சாலை கழிவுநீா் தொட்டியில் விஷவாயு தாக்கி ஒருவா் உயிரிழப்பு; இருவருக்கு சிகிச்சை

Published on

ராணிப்பேட்டை அருகே தோல் தொழிற்சாலையில் கழிவுநீா் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கியதில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ராணிப்பேட்டை அருகே வி.சி.மோட்டூா் எம்.பி.டி ரோடு பகுதியில் தனியாா் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், நிறுவன வளாகத்தில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் இரண்டு தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த சுத்தம் செய்யும் பணியில் வி.சி.மோட்டூரைச் சோ்ந்த ராமன் (47), அதே பகுதியைச் சோ்ந்த குமாா் (38) ஆகியோா் ஈடுபட்டுள்ளனா். அப்போது ராமன், குமாா் மற்றும் தொழிற்சாலை உரிமையாளரான விஷாரம் பகுதியைச் சோ்ந்த ரைஸ் அஹமது (44) ஆகியோா்விஷவாயு தாக்கி மயங்கியுள்ளனா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ராமன் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

குமாா், ரைஸ் அஹமது மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து ராணிப்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com