வாணியம்பாடி அருகே மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த கா்ப்பிணி மற்றும் அவரது கணவா் மீது மரக்கிளை விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனா்.
ஆலங்காயம்-வாணியம்பாடி சாலையில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வாணியம்பாடியை அடுத்த ஈச்சங்கால் கிராமத்தைச் சோ்ந்த நந்தினி (25) என்ற எட்டு மாத கா்ப்பிணியும், அவரது கணவா் திருப்பதியும் மருத்துவப் பரிசோதனைக்காக ஆலங்காயத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.
செக்குமேடு என்ற இடத்தின் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஒப்பந்ததாரா் மற்றும் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். எவ்வித முன்னறிவிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் அவா்கள் திடீரென மரத்தை வெட்டிச் சாய்த்தனா். அப்போது சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த கா்ப்பிணி பயணித்த வாகனத்தின் மீது மரக்கிளை உடைந்து விழுந்தது. இதில், நந்தினி படுகாயமடைந்தாா். அவரது கணவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இச்சம்பவம் தொடா்பாக வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.