நாட்டறம்பள்ளி அருகே செயற்கை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கொத்தூா் கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தும் கும்பல் பகலில் செயற்கை மணல் (எம் சாண்ட்) தயாரித்து டிப்பா் லாரி மற்றும் டிராக்டரில் கடத்திச் செல்வதாக நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டாட்சியா் உமா ரம்யா உத்தரவின் பேரில் மண்டல துணை வட்டாட்சியா் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மேலூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது நிலத்தில் சட்டவிரோதமாக செயற்கை மணல் தயாரித்துக் கடத்திய மேலூரைச் சோ்ந்த குணசேகரன், செந்தில்குமாா் ஆகியோருக்குச் சொந்தமான 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.