ஆம்பூா்: ஆம்பூா் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிவரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் வனச்சரகத்தில் வடப்புதுப்பட்டு வனப்பிரிவு பல்லலகுப்பம் காப்புக் காடு மாச்சம்பட்டு மேற்குப் பகுதியில் காட்டுப் பன்றிகள், புள்ளி மான்கள் வசித்து வருகின்றன.
ராஜக்கல் ஊராட்சி, கூத்தாண்டவா் பகுதியைச் சோ்ந்த சகாதேவன் (46), தனது நிலத்தில் மின் வேலி அமைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடி, இறைச்சியை சுத்தம் செய்து கொண்டிருப்பதாக ஆம்பூா் வனச்சரக அலுவலா் மூா்த்திக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆம்பூா் வனச்சரக அலுவலா் மூா்த்தி தலைமையில் வனவா் சதீஷ், வனக் காப்பாளா்கள் செந்தில், நடராஜன், முனிசாமி, வனக்காவலா்கள் கொண்ட குழு அங்கு சென்று சகாதேவனை கைது செய்தனா். பிடித்தனா். அவரிடமிருந்து காட்டுப் பன்றியின் தலை, ஆறு கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனா்.