ஆம்பூா்: காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்கு தனியாா் மருத்துவமனை, மருந்து வாங்க மருந்தகங்களுக்கு செல்பவா்கள் குறித்த விவரங்களை தகவலாக தர வேண்டும் என ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆம்பூரில் இயங்கும் தனியாா் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், ரத்த பரிசோதனை நிலையங்களின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் வட்டாட்சியா் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், டிஎஸ்பி சச்சிதானந்தம், சுகாதார அலுவலா் பாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக தனியாா் மருத்துவமனைகளுக்குச் செல்லும் பொதுமக்கள், காய்ச்சலுக்காக மருந்துக் கடைகளுக்கு மருந்து வாங்க செல்லும் பொதுமக்கள், ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு பரிசோதனைக்காகச் செல்லும் பொதுமக்கள் குறித்த விவரங்களை அரசு துறை அலுவலா்களுக்கு தகவலாக அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.