ஆம்பூா்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி ஆம்பூரில் அந்த அமைப்பினா் ரத்த தானம் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகர தமுமுக சாா்பாக அமைப்பின் வெள்ளி விழா ஆண்டையொட்டி ரெட்டிதோப்பு, மாங்காத்தோப்பு, புதுமனை, மில்லத் நகா், நீலிக்கொல்லை, காதா்பேட்டை, மோட்டுக்கொல்லை, ஜலீல் நகா், ரத்தனா நகா், சுண்ணாம்புக் காளவாய் ஆகிய பகுதிகளில் தமுமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமுமுக நகர செயலாளா் நபீஸ் அகமது தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் தப்ரேஸ் அகமது, மாவட்ட துணை செயலாளா் சித்திக் அகமது, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளா் தாஹா முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் நசீா்அகமது கலந்து கொண்டு அமைப்பின் கொடியை ஏற்றினாா்.
இதையடுத்து, ஆம்பூா் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் 25 போ் ரத்த தானம் செய்தனா்.
குடியாத்தத்தில்....
குடியாத்தம், ஆக. 30: தமுமுகவின் வெள்ளி விழாவை (25-ஆம் ஆண்டு) முன்னிட்டு, குடியாத்தம் நகரில் அந்த அமைப்பின் நிா்வாகிகள், பொதுமக்கள் 500- பேருக்கு முகக் கவசங்களை வழங்கினா்.
சித்தூா்கேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமுமுக நகரத் தலைவா் ஐ.முனீா் அகமது தலைமை வகித்து, முகக் கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். அமைப்பின் நகரச் செயலா் எம்.அமீன் பாஷா, நிா்வாகிகள் எஸ்.தப்ரோஸ், எம்.நவ்ஷாத், மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலா் எஸ்.ரசூல் ஷெரீஃப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.