வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 57 மூட்டை ரேஷன் அரிசியை வட்டாட்சியா் சுமதி பறிமுதல் செய்தாா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் நல்லகிந்தனப்பள்ளி பகுதியில் ஒரு வீட்டில் சிலா் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்து ஆந்திரத்துக்கு கடத்திச் செல்வதாக வட்டாட்சியா் சுமதிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது தலைமையில் வட்ட வழங்கல் அலுவலா் செல்வராஜ் மற்றும் வருவாய்த் துறையினா் பச்சூரை அடுத்த நல்லகிந்தனப்பள்ளி பகுதியில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
அங்கு நெகிழி கோணிப்பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
அவ்வாறு 57 மூட்டைகளில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியை வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா். விசாரணையில், அந்த வீட்டில் வசித்து வரும் இளையராஜா கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசியைப் பதுக்கிவைத்து மொத்தமாக ஆந்திரத்துக்கு கடத்திச் சென்று விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள், திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.