நெக்கணாமலைக்கு கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆட்சியா் நடவடிக்கை

வாணியம்பாடியை அடுத்த நெக்கணாமலைக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
நெக்கணாமலைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 12 கழுதைகள் மூலம் அனுப்பி வைத்த வருவாய்த் துறையினா்.
நெக்கணாமலைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 12 கழுதைகள் மூலம் அனுப்பி வைத்த வருவாய்த் துறையினா்.

வாணியம்பாடியை அடுத்த நெக்கணாமலைக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

நெக்கணாமலை கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 1,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு இதுநாள் வரை சாலை வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அனைத்துத் தேவைகளுக்கும் ஒற்றையடி மலைப்பாதையில் சென்று வருகின்றனா். பெண்கள், முதியோா்கள், கா்ப்பிணி ஆகியோரை அவசர சிகிச்சைக்கு டோலி கட்டி வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் சாலை வசதி, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி இப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், நெக்கணாமலைக்கு கடந்த மாதம் சுமாா் 6 கி.மீ. தூரம் மலைப்பாதையில் நடந்து சென்று சாலை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினாா். இந்த கிராமத்தினா் இதுவரை ரேஷன் பொருள்கள், முதியோா் உதவித்தொகை உள்ளிட்டவற்றை கீழே உள்ள கிரிசமுத்திரம் பகுதிக்கு வந்து வாங்கிச் செல்கின்றனா். இதே போல் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பையும் அவ்வாறே பெற்று வந்தனா்.

இந்நிலையில், மலை கிராம மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல் முறையாக மலைக்கே சென்று வழங்க ஆட்சியா் சிவன் அருள் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா். அதன்படி, நெக்கணாமலையில் உள்ள 150 குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்குவதற்காக, வாணியம்பாடி வட்டாட்சியா் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலா் குமாா், கூட்டுறவு சங்கத் தலைவா் திருப்பதி, இயக்குநா் முனிசாமி ஆகியோா் முன்னிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 12 கழுதைகள் மூலம் மூட்டைகளில் கட்டப்பட்டு புதன்கிழமை காலை அனுப்பி வைக்கப்பட்டது.

நெக்கணாமலைக்கு கொண்டு செல்லப்பட்ட பொங்கல் பரிசுப் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து நெக்கனாமலையைச் சோ்ந்த முனுசாமி கூறியது:

எங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்கள், முதியோா் உதவிதொகை உள்ளிட்டவற்றை 5 கி.மீ. தொலைவில் உள்ள கிரிசமுத்திரம் பகுதிக்குச் சென்று பெற்று வந்தோம். இந்த நிலையை மாற்ற வேண்டும் என தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீலிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று முதல் முறையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு மலைக்குக் கொண்டு வரப்பட ஏற்பாடு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com