திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 2 கோடி மதிப்பில் 20 செயற்கை சுவாச கருவிகள், கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மையத்தில் பயன்படுத்த மரபணுவை தானியங்கி முறையில் பிரித்தெடுக்க ரூ.20 லட்சத்தில் இயந்திரம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். அமைச்சா் கே.சி.வீரமணி இயந்திரங்களை மருத்துவமனைக்கு ஒப்படைத்தாா். மருத்துவப் பணிகளின் இணை இயக்குநா் யாஸ்மின், அரசு தலைமை மருத்துவா் திலீபன், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆற்காட்டில்... ஆற்காடு வட்டம், விளாப்பாக்கம் தனியாா் மகளிா் கல்லூரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சா் கே.சி.வீரமணி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
ராணிப்பேட்டை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான், அரக்கோணம் எம்எல்ஏ சு. ரவி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசிகண்ணம்மா, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் இளவரசி, ஆற்காடுவட்டாட்சியா் காமாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.