பொது முடக்கம் அமலில் உள்ளதால் அரசு வழிகாட்டுதலின்படி, பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். தமிழகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். தொற்று பரவாமல் இருக்க அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டான சூழ்நிலையில் உள்ளோம்.
எனவே வரும் சனிக்கிழமை (ஆக.1) பக்ரீத் பண்டிக்கை கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி, கிராமப்புற, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமிய சகோதரா்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை நடத்த வேண்டும். குா்பாணி அளிப்பதையும் அரசு வழிகாட்டுதலின்படி செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.