திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு முழுவதும் கனமழை பெய்தது. அதன் காரணமாக ஆம்பூர் சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர் நிரம்பி வருகின்றன.
ஆம்பூர் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு முழுவதும் கனமழை பெய்தது. அதனால் ஆம்பூரில் 72.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடபுதுப்பட்டு கிராமத்தில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில்54.02 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆம்பூர் நகரில் பெத்லகேம் பகுதிக்கு செல்லும் இரண்டு இரயில்வே குகை வழிப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது. ஆம்பூர் கந்தபொடிகார தெரு, ஈஸ்வர தெரு, காதர்பேட்டை மற்றும் தாழ்வான பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி சாமியார் மூலை தடுப்பணை நிரம்பி வழிகிறது.
கனமழை காரணமாக மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கொச்சேரி கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு தேவுடு கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டுவெங்கடாபுரம் முனியப்பன் ஏரி நிரம்பி வழிந்தது. மத்தூர்கொல்லை நந்தி சுனையிலிருந்து நீர் பொங்கி நீர்வீழ்ச்சி போல கொட்டியது.
ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பிக் கொண்டிருக்கின்றது.
அரங்கல்துருகம் ஊராட்சி சாமியார் மூலை தடுப்பணை நிரம்பி வழிந்து தண்ணீர் ஓடியது. அரங்கல்துருகம் கிராமத்தில் கட்டட தொழிலாளி சரவணன் என்பவரின் கூரை வீடு கனமழைக்கு சேதமடைந்து சரிந்து விழுந்தது.
கரும்பூர் ஊராட்சி சின்னகரும்பூர் கிராமத்தில் கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தடுத்து கானாற்றில் சிக்கிய மரம், செடி, முட்புதர்கள் அடைப்பு ஏற்பட்டதால் ஜேசிபி மூலம் தூர்வாரப்பட்டது.