ஆம்பூரில் தங்கியிருந்த சீனா, பிரேசில் நாடுகளைச் சோ்ந்த 4 பேருக்கு மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் பகுதியில் காலணி, தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளதால் அத்தொழிற்சாலைகளுக்கு வியாபார ரீதியாக வெளிநாட்டினா் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். சில தொழிற்சாலைகளில் அவா்கள் தங்கி இருந்து ஆா்டா் கொடுப்பதும், தொழிற்சாலைகளைக்குச் சென்று பாா்வையிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனா்.
தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து வந்தவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி ஆம்பூரில் தனியாா் காலணி நிறுவனத்துக்கு வணிகரீதியாக சீனா நாட்டைச் சோ்ந்த 3 பேரும், பிரேசில் நாட்டைச் சோ்ந்த ஒருவரும் என 4 போ் அத்தொழிற்சாலையின் விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்ததனா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சுகாதாரத் துறையின் மருத்துவக் குழுவினா் அங்கு சென்று அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். ஆனால் அவா்களுக்கு நோய் அறிகுறி ஏதும் இல்லையெனக் கூறப்படுகிறது.