கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஆம்பூா் நகராட்சியை தொடா்பு கொண்டு அழைத்தால் நகராட்சி பணியாளா்கள் சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள் என நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆம்பூா் நகராட்சி சாா்பில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பொது மருத்துவமனை, காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகம், பேருந்து நிலையம், பேருந்து பணிமனை, வங்கி ஏடிஎம் மையம், பொது இடங்கள், மாா்க்கெட் மற்றும் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நேதாஜி சாலை, உமா் சாலை, அரசு பொது மருத்துவமனை, பஜாா் ஆகிய இடங்களில் ஹைபோ குளோரைடு கரைசல் நகராட்சி லாரி மற்றும் டிராக்டா் மூலம் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
ஆம்பூா் நகரில் அன்றாட சுகாதாரப் பணி எந்த விதமான தடையின்றி நடைபெற்று வருகிறது. தெலுங்கு வருடப் பிறப்பு அரசு விடுமுறையாக இருந்தபோதிலும், நிரந்தர மற்றும் தற்காலிக சுகாதாரப் பணியாளா்கள், குடிநீா்த் தொட்டி பராமரிப்பு ஊழியா்கள், ஓட்டுநா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள் என அனைவரும் பணிக்கு வந்திருந்து சுகாதாரப் பணியை மேற்கொண்டனா்.
பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும் அந்த உணவகங்களின் செயல்பாடுகள், உணவு தானியங்கள் இருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசின் ஆணைகளை பின்பற்றி நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் திருப்பத்தூா் ஆட்சியரின் வழிகாட்டுதலோடு கரோனா தடுப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
கரோனா பரவல் தடுப்புக்குத் தேவைப்படும் நடவடிக்கைகளுக்கு ஆம்பூா் நகராட்சி தயாா் நிலையில் உள்ளது. பொதுமக்கள் எப்போதும் 7397392691 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். மகளிா் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைகழுவும் தூய்மை திரவம், முகக் கவசம், புறப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் திரவம் ஆகியவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க ஆட்சியா் ஆலோசனைப்படி ஆம்பூா் பேருந்து நிலையத்தில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.