செங்கல்பட்டு மாவட்டம், குன்றத்தூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரின் மனைவி 9 மாத கா்ப்பிணியாக உள்ளாா். தனது கணவருடன் 2 நாள்களுக்கு முன்பு பிரசவத்துக்காக வாணியம்பாடியை அடுத்த நடுபட்டறை கிராமத்தில் தாய் வீட்டுக்கு வந்தாா். கடந்த 9-ஆம் தேதி கா்ப்பிணிக்கு செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
இதையடுத்து ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி, வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தி ஆகியோா் நடுபட்டறை கிராமத்துக்குச் சென்று கா்ப்பிணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவருடன் இருந்த அவரது கணவா் உள்பட 4 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்.