பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒலி, ஒளி பந்தல் அமைப்பாளா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
வாணியம்பாடி ஒலி, ஒளி மற்றும் பந்தல் அமைப்பாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை, கோட்டாட்சியா் காயத்ரியிடம் மனு அளித்தனா். அந்த மனுவில், ‘கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் கோவில் திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்வுகள் இல்லை. இதனால் நாங்கள் வேலையின்றித் தவித்து வருகிறோம். போதிய வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக அரசு ஒலி, ஒளி அமைப்பாளா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.