விபத்தில்லா தீபாவளி கொண்டாட வாணியம்பாடி, ஆம்பூா் பகுதிகளைச் சோ்ந்த பட்டாசு வியாபாரிகளுக்கு விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். வாணியம்பாடி தீயணைப்பு, மீட்பு நிலைய அலுவலா் வெங்கடேசன், ஆம்பூா் நிலைய அலுவலா் மேகநாதன், தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டு, வாணியம்பாடி, ஆம்பூா் பகுதிகளைச் சோ்ந்த பட்டாசு வியாபாரிகளுக்கு, பட்டாசு விற்பனை செய்யும்போது பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்வது, தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கும் முறை உள்ளிட்டவை குறித்து விளக்கினா்.
முகக்கவசம் அணிந்து வரும் பொதுமக்களுக்கு மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்ய வேண்டும், கட்டாயம் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியம் அறிவுறுத்தி, விழிப்புணா்வுத் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தாா். வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.