திருப்பத்தூா்: பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் ஏலகிரி மலைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக ஏலகிரி மலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. சென்னை வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா புதன்கிழமை திறக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தினமணி செய்தியாளரிடம் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் கூறியது:
தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில், கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இதர மாவட்ட சுற்றுலாப் பயணிகள் உள்பட பொதுமக்கள் ஏலகிரி மலைக்கு வரும்போது அவசியம் இ-பாஸ் பெற வேண்டும். உள்ளூா் மாவட்ட மக்கள் ஏலகிரிக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை.
மேலும், மலை அடிவாரத்தில் காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
விடுமுறை தினத்தை முன்னிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம்.
தற்போது, இயற்கை பூங்கா, படகு குழாம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இறுதிக்கட்ட ஆய்வுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா்.