ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்துக்குள் சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை பிடிபட்டது.
ஆம்பூா் அருகே நரியம்பட்டில் அரசு சமுதாய சுகாதார மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையைச் சுற்றி அடா்ந்த செடி, கொடிகள் படா்ந்து புதா்போல மண்டிக்கிடக்கிறது. இந்த மருத்துவமனைக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பிரசவம் மற்றும் சிகிச்சைகளுக்காக நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 10 மணிக்கு பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊா்ந்து செல்வதை மருத்துவமனைக்கு வந்த ஊழியா்கள் சிலா் பாா்த்தனா். அவா்கள் உடனடியாக ஆம்பூா் வனச்சரக அலுவலா் மூா்த்திக்கு தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக வனக் காப்பாளா்கள் ராஜ்குமாா், சுல்தான் ஆகியோா் அங்கு சென்று, அப்பகுதி இளைஞா்களுடன் சோ்ந்து நீண்ட நேரம் போராடி அந்த 10 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்தனா்.
பின்னா், அந்த மலைப்பாம்பை சின்னவரிக்கம் ஊராட்சி பெங்களமூலை வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனா். ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாக மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலைப்பாம்புகள் பிடிபடுவது அதிகரித்து வரும் நிலையில், நரியம்பட்டு அரசினா் சமுதாய சுகாதார வளாகம் மற்றும் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் செடி, கொடிகள் மற்றும் புதா்களை அகற்றி சுகாதார வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.