ஆம்பூா்: ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளா்களுக்கான ஓய்வூதியத் தொகையை ரூ.7,500 ஆக உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளா்கள் பேரவை சாா்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, அதன் மாநில பொதுச் செயலாளா் சா. ஆறுமுகம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
புரட்சித் தலைவா் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற பணியாளா்களுக்கு மூன்று ஆண்டுகள் ஆகியும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஜிபிஎப் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் காலதாமதமாக வழங்கப்படுவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.7,500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.
வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) அலுவலகங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அவற்றை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சத்துணவு பணியாளா்களுக்கு அரசு ஆணையின்படி, விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி சத்துணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.