திருப்பத்தூரில் பணியில் இருந்த காவலா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அவரின் உடல், 21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ஜோலாா்பேட்டை அருகே உள்ள பாச்சல் ஊராட்சி ராஜீவ் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (45).
இவா், திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலக கருவூலத்தில் சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் பணியில் இருந்தவா் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். இதையடுத்து அவருடன் இருந்தவா்கள், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.பின்னா், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரின் உடல் ராஜீவ் காந்தி நகா் அருகே உள்ள பாரதிதாசன் நகா் ஏரி பகுதியில் உள்ள சுடுகாட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் முன்னிலையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஸ்ரீதரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. விஜயகுமாா், இறந்த ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இறப்பு நிதியுதவியை வழங்கினாா்.